அமிர்தசரஸ் (பஞ்சாப்): ஷெர்-இ-பஞ்சாப் மகாராஜா ரஞ்சித் சிங்கின் நினைவுநாளை அனுசரிப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் லாகூரின் குருத்வாரா ஸ்ரீ தேரா சாஹிபிற்கு வருகைதரும் சீக்கியர்களின் ஜாதாவிற்கு இந்தாண்டு பாகிஸ்தானுக்குச் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது என சிரோமணி குருத்வாரா பிரபந்த செயற்குழு (எஸ்.ஜி.பி.சி.) புதன்கிழமை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கரோனா பெருந்தொற்று காரணமாகவே சீக்கியர்களின் ஜாதாவிற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி மறுத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் எஸ்.ஜி.பி.சி. குறிப்பிடப்பட்டுள்ளது.
"எஸ்.ஜி.பி.சி.யின் யாத்திரைத் துறை பாகிஸ்தான் சீக்கிய குருத்வாரா பர்பந்தக் கமிட்டியின் (பி.எஸ்.ஜி.பி.சி.) தலைவர் சத்வந்த் சிங்குடன் தொலைபேசியில் பேசியது.
கோவிட்-19 நிலைமை காரணமாக, ஷெர்-இ-பஞ்சாப் மகாராஜா ரஞ்சித் சிங்கின் நினைவுநாளை அனுசரிப்பதற்கு பாகிஸ்தானுக்குச் செல்லும் இந்திய சீக்கிய யாத்ரீகர்களின் 'ஜாதா'விற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கவில்லை”என்று எஸ்.ஜி.பி.சி.யின் ஊடக உதவிச் செயலாளர் குல்விந்தர் சிங் ராம்தாஸ் கையெழுத்திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 29 அன்று மகாராஜா ரஞ்சித் சிங்கின் நினைவுநாளை அனுசரிக்க இந்திய சீக்கியர்கள் வரும் 21ஆம் தேதி பாகிஸ்தான் புறப்பட்டு, ஜூன் 30 அன்று மீண்டும் திரும்புவதாக இருந்ததையும் குல்விந்தர் சிங் குறிப்பிட்டார்.
மகாராஜா ரஞ்சித் சிங்கின் நினைவுநாளை அனுசரிக்க பாகிஸ்தானுக்குச் செல்வதற்கான கடவுச்சீட்டை அலுவலகத்தில் சமர்ப்பித்த யாத்ரீகர்கள், அதன் ஆவணங்களை அதன் யாத்திரைத் துறையிலிருந்து சேகரிக்குமாறு எஸ்.ஜி.பி.சி. வலியுறுத்தியுள்ளது.