பல்லாண்டு காலமாக இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்திலிருந்த ஹாங்காங், 1997ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்றிலிருந்து, ஹாங்காங் சீனாவின் இரண்டு சிறப்புப் பிராந்தியங்களுள் ஒன்றாக விளங்கிவருகிறது.
பாதுகாப்பு, வெளியுறவுத் துறைகள் மட்டும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளன. மற்ற அனைத்துத் துறைகளையும் ஹாங்காங் அரசு நிர்வகித்துவருகிறது.
ஆனால், ஹாங்காங் ஒப்படைக்கப்பட்ட நாளிலிருந்தே அதனைத் தனது முழுக் கட்டுப்பாட்டுக்குக்குள் கொண்டுவர வேண்டும் எனச் சீன அரசு அடுக்கடுக்காக அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவருகிறது.
இதனை எதிர்த்தும், ஜனநாயக உரிமை கோரியும் ஹாங்காங் மக்கள் பல ஆண்டுகளாகப் போராட்டம் நடத்திவருகின்றன.
இதனிடையே, ஹாங்காங்கில் குற்றவியல் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படும் நபர்களைச் சீனாவுக்கு நாடு கடத்தி விசாரணை மேற்கொள்ளவதற்காக அந்நகர அரசு கடந்தாண்டு கைதிகள் பரிமாற்ற மசோதாவைக் கொண்டுவர முயன்றது.
ஆனால், இந்த மசோதா தங்களது ஜனநாயக உரிமைக்குக் குந்தகம் விளைவிக்கும் எனக் கூறி ஹாங்காங் மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின் அழுத்தம் தாங்கமுடியாமல் ஹாங்காங் அரசு மசோதாவைக் கைவிட்டது. ஆனாலும், ஜனநாயக உரிமைக்கோரி மக்கள் அங்கு போராட்டத்தைத் தொடர்ந்தனர். இது சீனாவை எரிச்சலூட்டியது.
இந்நிலையில், உலக முழுவதும் பரவிவரும் கரோனா வைரஸ் (தீநுண்மி) சீனாவில் குறைந்த வருவதைச் சாதகமாகப் பயன்படுத்தி அந்நாட்டு அரசு ஹாங்காங் மீதான தனது பிடியை இறுக்கும் நோக்கில் தேசியப் பாதுகாப்பு மசோதாவை கொண்டுவரும் வேளையில் இறங்கியது.
இந்த மசோதாவானது சீனா நாடாளுமன்றத்தில் தற்போது நிறைவேறியுள்ளது. இதையடுத்து இந்த மசோதா கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அந்தக் குழு ஒப்புதல் அளித்த பிறகு, வரும் ஆகஸ்ட் மாதம் தேசியப் பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஹாங்காங்கின் சிறப்புத் தகுதிகளை முடிவுக்குக் கொண்டுவரக்கூடும் என ஜனநாயக ஆதரவு ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : 'மூச்சு விட முடியல' என்று கதறிய பின்னரும் விடாத போலீஸ் - உயிரிழந்த ஆப்பிரிக்க அமெரிக்கர்