சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகர் வூஹானில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே ஆட்கொண்டுள்ளது. மனித இனத்தை அச்சுறுத்தி வரும் இந்நோய் காரணமாக, இதுவரை உலகளவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கரோனா விவகாரத்தில் உண்மையான புள்ளி விவரங்களை சீனா மூடிமறைப்பதாக உலக நாடுகள் குற்றஞ்சாட்டியிருந்த சூழலில், உயிரிழப்புகளைக் கணக்கிடுவதில் குறைபாடு உள்ளதாக ஒப்புக்கொண்டு திருத்தப்பட்ட புள்ளி விவரங்களை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, கரோனாவின் பிறப்பிடமான வூஹானில் 2 ஆயிரத்து 597 பேர் உயிரிழந்ததாக முன்பு அறிவித்ததை திருத்தி மூன்று ஆயிரத்து 869ஆக (மேலும்1,290 பேர்) அறிவித்துள்ளது. இதன்மூலம், அந்நகரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
'தாங்கள் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுகிறோம்' என்பதை பறைசாற்றவே இத்தகவல் வெளியிடப்பட்டதாக வூஹான் அரசு விளக்கமளித்துள்ளது.
இதன்மூலம், சீனாவில் கரோனாவுக்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை நான்கு ஆயிரத்து 632ஆக உயர்ந்துள்ளது. ஆனால், இத்தகவல் சீன சுகாதார ஆணைய இணையதளத்தில் தற்போது வரை பதிவேற்றப்படவில்லை.
இதுவரை சிகிச்சை முடிந்த 77 ஆயிரத்து 44 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும், ஆயிரத்து 81 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தப்லீகி ஜமாத் விவகாரத்தில் ஊடகங்களின் இரட்டை நிலை