கரோனா வைரஸ் நோய் உலகையே ஆட்டிப்படைத்துவரும் நிலையில், அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயோஎன்டெக் (BioNTech) இணைந்து தயாரித்த கரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம், ஏழை நாடுகளுக்கு இந்தத் தடுப்பூசி விரைவில் கிடைக்கப்படவுள்ளது.
ஏற்கனவே, ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளில் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு, அந்தந்த நாடுகளில் உள்ள மருத்துவ ஒழுங்குமுறை ஆணையம் தடுப்பூசிக்கு அனுமதி வழங்க வேண்டும். ஆனால், சுகாதார கட்டமைப்பு பலவீனமாக உள்ள நாடுகள் உலக சுகாதார அமைப்பையே நம்பியுள்ளன.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஃபைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயோஎன்டெக் (BioNTech) தயாரித்த கரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன. உலக சுகாதார அமைப்பு விதித்த பாதுகாப்பு, செயல்திறன் அளவுகோல்களை அந்தத் தடுப்பூசி பூர்த்திசெய்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்தத் தடுப்பூசிகளைத் தீவிர உறையும் வெப்பநிலையில் சேமிக்க வேண்டும். அம்மாதிரியான உபகரணங்கள் வளரும் நாடுகளில் இல்லாத காரணத்தால் இதனைச் சேமிப்பது மிகப் பெரிய சவாலாக கருதப்படுகிறது.