அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகியவை உறுப்பு நாடுகளாக அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் தலைவர்கள் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை கொள்கையில் இந்திய பசிபிக் பிராந்தியம் மிக முக்கியப் பங்கு வகிக்கவுள்ளதாகவும் இதனைக் கருத்தில் கொண்டே இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த பயணம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு வரும் ஆஸ்டின், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் மோடி ஆகியோரை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவை தொடர்ந்து, அவர் மற்ற இந்தோ பசிபிக் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது.
கிழக்கு லடாக் பகுதியில் இந்திய சீன நாடுகளுக்கிடையேயான ராணுவம் திரும்பபெறும் நடவடிக்கை நடைபெற்றுவரும் நிலையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சரின் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.