அமெரிக்காவின் அடுத்த அதிபராக, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது பதவியேற்பு விழா வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தான் பங்கேற்கப்போவதில்லை என தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
புதிய அதிபரை வரவேற்கும் வகையில், தற்போதைய அதிபர் விழாவில் பங்கேற்பது வழக்கம். இந்த மரபை மீறி, ட்ரம்ப் இதுபோன்று அறிவித்துள்ளது அந்நாட்டின் அரசியல் அரங்கில் இறுக்கமான சூழலை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், பதவியேற்பு விழாவில் தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதற்கு ஜோ பைடனும் மகிழ்ச்சியுடன் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றம் என்பது சுமுகமாக நடைபெற வேண்டும் என்பதே தனது எண்ணம் எனவும், ட்ரம்ப்பின் செயல்பாடு மிக மோசமான முன்னுதாரணம் எனவும் ஜோ பைடன் கூறியுள்ளார்.
முன்னதாக தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ளாது முரண்டுபிடித்த ட்ரம்ப், தேர்தலில் முறைகேடு நடந்துவிட்டதாகப் பழிபோட்டு வந்தார்.
அத்துடன் அவரது ஆதரவாளர்கள் கடந்த வியாழன் அன்று(ஜனவரி 7) அந்நாட்டு நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து சூறையாடினர். இது அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது அல்லாமல், உலகம் முழுவதும் பெரும் கலக்கத்தையும் ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்திற்குப் பின்னணியில் ட்ரம்ப்பின் தூண்டுதல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ட்ரம்ப் பதவி விலகுவதுதான் அமெரிக்காவின் நலனா?