ஈரானின் பாதுகாப்புப் படைகளுள் ஒன்றான இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படை சார்பில் நேற்று நூர் (ஒளி) என்ற ராணுவ செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உருவாக்கும், ஈரானின் லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லவே இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டதாக அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே, செயற்கைக்கோள் ஏவப்பட்டு சில மணி நேரங்களில் ஈரானைக் குறிவைத்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த அதிபர் டொனால்டு ட்ரம்ப், 'அமெரிக்க கப்பல்களை ஈரானியக் கப்பல் படையினர் தாக்கினால், அதனைச் சுட்டு வீழ்த்த அமெரிக்க கப்பல் படைக்கு உத்தரவிட்டுள்ளதாக' மிரட்டல் விடுத்துள்ளார்.
ட்ரம்ப்பின் ட்வீட்டுக்கு பதிலளித்திருந்த இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படை செய்தித்தொடர்பாளர், "மற்றவர்களை மிரட்டுவதற்குப் பதிலாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினரைப் பாதுகாப்பதில், நேரத்தைச் செலவழிக்க வேண்டும்" என விமர்சித்துள்ளார்.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ பேசுகையில், "தற்போது நடத்தப்பட்ட ஏவுகணைச் சோதனை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்துக்கு முரணானது. ஒரு பயங்கரவாத அமைப்பை செயற்கைக்கோளை விண்ணில் ஏவ அனுமதித்த ஈரான் பதில் சொல்ல வேண்டும்" என்றார். (ஓராண்டிற்கு முன்பு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையை அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது)
இந்த சொற்போர் அமெரிக்கா-ஈரான் இடையேயான புது மோதலை மீண்டும் பற்றவைத்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா பரவி வரும் சூழலில், ஈரான்-அமெரிக்கா இடையே வெடித்துள்ள இந்த புதிய மோதல் உலக அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோவிட்-19 : இரண்டாம் அலைக்குத் தயாராகும் தென் கொரியா !