அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் செவ்வாய்க்கிழமை (நவ.3) நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப்பும், அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.
தற்போதுவரை வெளியான கருத்துக்கணிப்புகளில் ஜனநாயகக் கட்சியே முன்னணியில் உள்ளது. குறிப்பாக ஆசியா, ஆப்பிரிக்கா, ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஜோ பிடனுக்கு ஆதரவளிக்கின்றனர். அதேபோல் வெள்ளையின மக்கள் ட்ரம்ப்பிற்கு ஆதரவளிக்கின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் இறுதி வரை 71 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 51 சதவீதம் வாக்காளர்கள் பிடனுக்கு ஆதரவாகவும், 43 சதவீதம் வாக்காளர்கள் ட்ரம்பிற்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
வயதுவாரியாக பார்க்கும்போது 18 முதல் 29, 30 முதல் 54 வயதுடைய மக்கள் பிடனுக்கு ஆதரவாக வாக்களிக்கின்றனர். அதே நேரம் 65 வயதிற்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோர் ட்ரம்பையே ஆதரிக்கின்றனர்.
ஆசிய-அமெரிக்கர்களில் 65 சதவீதம் பேர் பிடனையும் 28 சதவீதம் பேர் ட்ரம்பையும் ஆதரிக்கின்றனர். அதேபோல் ஆப்பிரிக்க அமெரிக்க இன மக்களில் 86 சதவீத பேர் பிடனுக்கு ஆதரவாக உள்ளனர்; ட்ரம்பிற்கு வெறும் 9 சதவீத ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மட்டுமே ஆதரவாக உள்ளனர்.
ஹிஸ்பானிக் வாக்காளர்களும் ட்ரம்பைவிட (35 சதவீதம்) பிடனையே (59 சதவீதம்) விரும்புகிறார்கள். வெள்ளை இன வாக்காளர்களில் மட்டுமே பிடனை (45) விட அதிகம் ட்ரம்பிற்கு (49) ஆதரவாக உள்ளனர்.
பெண் வாக்காளர்களில் 57 சதவீதம் பிடனுக்கும் 39 சதவீதம் ட்ரம்பிற்கும் ஆதரவாக உள்ளனர். ஆண் வாக்காளர்கள் மத்தியில் இருவருக்கும் கிட்டதட்ட சரிசமமான ஆதரவே உள்ளது (பிடன் 47, ட்ரம்ப் 48).
கரோனா காரணமாக வேலையிழந்த பெரும்பாலானோர் பிடனையே ஆதரிக்கின்றனர் என்றும் கருத்துக்கணிப்பு தெரிவிக்கின்றது.
இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் வாக்களித்தார்!