திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மறவர் காலனியைச் சேர்ந்தவர் முத்துகுமார் (34). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றிவந்தார். திருமணமாகாத இவருக்கு கடன் பிரச்சினை இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பிப்ரவரி 15ஆம் வீட்டில் உள்ளவர்களிடம் கோயிலுக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற முத்துகுமார் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. முத்துக்குமாரின் உறவினர்கள் அவரைப் பல இடங்களில் தேடினர். எங்கும் கிடைக்கவில்லை.
பின்னர் அவரது செல்போன் லோகேஷனை ஆய்வுசெய்தபோது அவர் குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள மலையில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று பார்த்தபோது பாறையில் முத்துகுமார் இறந்த நிலையில் கிடந்ததைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். அருகில் ஆசிட் பாட்டிலும் கிடந்துள்ளது.
இதையடுத்து அவரது உறவினர்கள் ஆரல்வாய்மொழி காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார், காவலர்கள் இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உறவினர்கள் அளித்த புகாரின்படி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: கள் இறக்குவோம்; முடிந்தால் தடுத்து பார்க்கட்டும்!