கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மேட்டு மகாதானபுரம் பகுதியில் ஆகஸ்ட் 29ஆம் தேதி இரவு 9 மணி அளவில் அதே பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் என்பவருடைய மகன் அருண்குமார் (23) என்ற இளைஞர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக லாலாபேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். இதையடுத்து நந்தன்கோட்டை பகுதியைச் சேர்ந்த அண்ணாவி மகன்கள் பெரியசாமி (27), வினோத் (24), கீழ் சிந்தலவாடியைச் சேர்ந்த காத்தவராயன் மகன் ஆனந்தன் (23) என மூன்று பேரை லாலாபேட்டை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
பின்னர் இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது நண்பர் ஜோதிவேல் உடன் மேட்டு மகாதானபுரத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் அருண்குமார் சென்றுகொண்டிருந்தார். அப்போது, இடையே அவர்களை வழிமறித்த பெரியசாமி கஞ்சா போதை பொருள் விற்பனை தொடர்பாகப் பேசியுள்ளார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அருண்குமாரை கொலை செய்ய திட்டமிட்ட பெரியசாமி, தனது சகோதரர் வினோத் உள்ளிட்ட கூலிப்படையினருடன் அவரது ஊருக்குச் சென்றுள்ளனர். அப்போது அருண்குமார், பெரியசாமி தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இதில், பெரியசாமி உள்ளிட்ட கூலிப்படையினர் அரிவாளைக் கொண்டு அருண்குமாரின் கழுத்து, தோள்பட்டை ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
கொலைசெய்யப்பட்ட அருண்குமார் மீதும், கைதுசெய்யப்பட்டுள்ள பெரியசாமி மீதும் பல்வேறு வழக்குகள் லாலாபேட்டை காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தக் கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது.
யார் பெரியவர் என்ற போட்டியின் காரணமாக இந்தக் கொலை நடைபெற்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: முதியவர்களை குறிவைத்து கொள்ளை - இரு ஆந்திர மாநிலத்தவர் கைது