சென்னை மாவட்டம் ஐ சி எஃப், நியூ ஆவடி ரோடு பகுதியில் சில நபர்கள் பல நாட்களாக அங்கு அமைந்துள்ள கடைகளில் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி வருவதாக காவல்துறையினருக்கு புகார் வந்த வண்ணமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று(பிப்.24) இரவு சந்தேகத்திற்கிடமாக ஒருவர் சுற்றி திரிந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஐசிஎப் காவல்துறையினர் அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த நபர் அண்ணாநகர் காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த எபினேஷ் சஞ்சய் ராஜ் (28) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அவரது தந்தை விவேக் ராஜன் மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருவது தெரியவந்தது.
மேலும் எபினேஷ் சஞ்சய் ராஜ், அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த ராபர்ட் என்பவர் உட்பட ஐந்து நபருடன் சேர்ந்து ஐசிஎப் நியூ ஆவடி ரோடு பகுதியில் உள்ள கடைகளில் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி வந்ததும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் அண்ணாநகர் காவல் நிலையத்தில் எபினேஷ் சஞ்சய் ராஜ் மீது 2014 ஆம் ஆண்டு ஒரு கொலை முயற்சி வழக்கு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ.70.5 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்!