சிவகங்கை: கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி ஆய்வுமேற்கொண்டார்.
இதனையடுத்து காரைக்குடியிலுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள, அழகப்பா பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிக்கு ஆய்வுமேற்கொள்ள காரில் சென்றார்.
அப்போது, காளையார்கோவில் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதுவதைத் தவிர்க்க ஓட்டுநர் முயன்றுள்ளார்.
அதில் கார் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர், உதவியாளர் மணிகண்டன், கார் ஓட்டுநர் செபஸ்டியான் ஆகியோர் காயங்களுடன் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி சிறு காயத்துடன் உயிர் தப்பினார். இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.