தூத்துக்குடி கோரம்பள்ளம் நியூ சுந்தர்நகர் பகுதியில் வசிப்பவர் பாலசுப்பிரமணியன் - மல்லிகா தம்பதி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
பாலசுப்பிரமணியம் திருநெல்வேலியில் ரயில்வே காவலராக பணியாற்றி, தற்போது ஒருவருடகாலமாக சென்னை ரயில்வே பாதுகாப்பு காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று(ஜன.28) சென்னையிலிருந்து ஊர் திரும்பிய அவர் தனது அப்பாவை பார்க்க ஏரல் அருகே உள்ள தலைவன் வடலிக்கு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றார். அதன் பிறகு வீடு திரும்பிய பாலசுப்பிரமணியம், வீட்டின் ஜன்னல் கதவு முற்றிலும் உடைக்கப்பட்டு பீரேவில் இருந்த நகைகள் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் காவல்துறையினர், கைரேகை நிபுணர்களுடன் வீட்டில் சோதனை நடத்தினர். இதன் முதல்கட்ட விசாரணையில், வீட்டிலிருந்த 25 சவரன் நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 10 லட்சம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து பாலசுப்பிரமணியம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிப்காட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் குற்றவாளிகளை தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.