செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த அப்பு என்கிற கார்த்திக், டீ குடிக்க கடைக்கு சென்றுள்ளார். கார்த்திக்கை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற மூன்று பேர் கும்பல், நாட்டு வெடிகுண்டு வீசி தாக்கியது. மேலும், அவரை துடிதுடிக்க கத்தியால் வெட்டியது.
இதில், சம்பவ இடத்திலேயே கார்த்திக் உயிரிழந்தார். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பஜார் பகுதியில் நடந்த கொலையால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், அதே கும்பல் வேறு இடத்திற்கு சென்று, மற்றொரு கொலையையும் அரங்கேற்றியது.
பட்டப்பகலில் இரட்டை கொலை
செங்கல்பட்டு மேட்டுத் தெருவைச் சேர்ந்த காய்கறி வியாபாரியான, சீனிவாசன் என்பவரின் மகன் மகேஷ் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அவரையும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த அந்த அடையாளம் தெரியாத கும்பல், அங்கிருந்து தப்பி ஓடியது. இருவரின் உடல்களையும் கைப்பற்றிய செங்கல்பட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த கொலை சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ள இடத்தில், பட்டப்பகலில் இரண்டு கொலைகளை நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இருவர் என்கவுன்டர்
இந்த சம்பவங்களால், செங்கல்பட்டில் மீண்டும் ரவுடியிசம், கொலை கும்பல் அட்டகாசங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
![Chengalpattu Encounter, Chengalpattu Encounter Murderer Dinesh](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14118776_en1.jpeg)
இந்நிலையில் கொலை தொடர்பாக இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை செய்ததில் மேலும் இருவர் காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
![Chengalpattu Encounter, Chengalpattu Encounter Murderer Moideen](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14118776_en.jpeg)
இதையடுத்து, அவர்களை பிடிக்க காட்டுப்பகுதிக்குள் காவல்துறையினர் சென்றனர். அப்போது, காவல்துறையினர் மீதும் நாட்டு வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், காவல்துறையினர் மேற்கொண்ட எதிர்தாக்குதலில் தினேஷ், மொய்தீன் என்ற இரண்டு பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்தில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பாலியல் துன்புறுத்தல்: மலைவாழ் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை!