விழுப்புரம்: கடலூர் மாவட்டம், கோண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர், பிரின்ஸ். இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் கடலூரில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, 5 பேர் கொண்ட கும்பல் பிரின்ஸ் காரை நிறுத்தி லிஃப்ட் கேட்டுள்ளனர். இதையடுத்து பிரின்ஸ் அவர்களுக்கு லிஃப்ட் கொடுத்துள்ளார்.
பின்னர் கார் மரக்காணம் அருகே வந்த போது அந்த கும்பல் கத்தியைக் காட்டி பிரின்ஸிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதில் அதிர்ச்சியடைந்த பிரின்ஸ் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து, அந்தக் கும்பல் கூகுள் பே மூலம் பணம் அனுப்பும் படி மிரட்டியுள்ளனர். இதையடுத்து அவர்களது கூகுள் பேவுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். பணத்தைப் பெற்றவுடன் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
பின்னர், இதுகுறித்து பிரின்ஸ் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சேகர் பாபுவின் மகன் சவுபர் சாதிக், அஜித்குமார், பாலமுருகன், வினோத் உள்ளிட்ட 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க : கடனுக்கு பொருள் கொடுக்க மறுத்த வியாபாரிக்கு அரிவாள் வெட்டு