சென்னை: புதுவண்ணாரப்பேட்டை பிரின்ஸ் அப்பார்ட்மென்டை சேர்ந்தவர் சேகர் (62). இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். மேலும் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்துவருகிறார்.
இந்நிலையில் சேகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெண்கள், குழந்தைகளிடம் தொடர்ந்து அத்துமீறும் செயலில் ஈடுபட்டுவருவதாக புதுவண்ணாரப்பேட்டை ஆய்வாளர் பீர்பாஷாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இது குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் குடியிருப்பில் இருந்த பெண்களிடம் சேகர் தொடர்ந்து அத்துமீறி வந்ததும், மேலும் அவர் குடியிருப்புச் சங்கத்தின் முக்கியப் பிரதிநிதியாக இருந்துவந்ததால் பெண்கள் யாரும் புகார் அளிக்காமல் அச்சத்தில் இருந்துவந்ததும் தெரியவந்தது.
உடனடியாக சேகரை கைதுசெய்த காவல் துறையினர் அவர் மீது பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு காண பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை