சென்னை ஆழ்வார் திருநகர் சாஸ்திரி நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் மஸ்பூர் ரகுமான் (45). இவருக்கும் நசரத்பேட்டையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதில் மஸ்பூர் ரகுமான் பெண் வழக்கறிஞரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பெண் வழக்கறிஞர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நசரத்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மஸ்பூர் ரகுமானை கைது செய்தனர்.
பின்னர் அவரை அம்பத்தூர் ஒரகடத்தில் உள்ள நீதிபதி தனஞ்செயன் வீட்டில் ஆஜர்படுத்த அவரை அழைத்து வந்தனர்.
நீதிபதிக்கு கொலை மிரட்டல்
காவல் துறையினரிடம் வழக்கு குறித்து நீதிபதி கேட்டுக்கொண்டிருந்தபோது, முஸ்பூர் ரகுமான் நீதிபதியை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் அவரை தடுக்க முயல்கையில் முஸ்பூர் தப்பிக்க முயன்றார். அவரை மடக்கிப் பிடித்த காவலர்கள், அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சிறையில் அடைத்த போலீஸ்
இதனையடுத்து நீதிபதியை மிரட்டியதாக நசரத்பேட்டை காவல் துறை உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் முஸ்பூர் ரகுமான் மீது மேலும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, அவரை அம்பத்தூர் நீதிபதி வீட்டில் மீண்டும் ஆஜர் செய்துவிட்டு சிறையில் அடைத்தனர்.