திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அடுத்த கோயில் மாதிமங்கலம் கீழ் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன். விவசாயி, இவரது மனைவி நித்யா. இவர்களது நிலத்தில் உள்ள கொட்டகையில் கட்டப்பட்டிருந்த பசு மாடு நேற்று முன்தினம் இரவு கன்று ஈன்றுள்ளது. இதனால் விஸ்வநாதன் வீட்டைப் பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் விவசாய நிலத்திற்கு சென்று நேற்று காலை வீட்டிற்கு வந்துள்ளனர்.
அப்போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 15 சவரன் நகை திருடு போயிருப்பது தெரிய வந்துள்ளது. இதேபோல் இதே தெருவைச் சேர்ந்தவர் சத்தியநாராயணன் அமெரிக்காவில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வளர்மதி தனது மகள் மகனுடன் வசித்து வருகிறார்.
கடந்த 3 நாள்களுக்கு முன்பு பொங்கல் பண்டிகைகொண்டாட புதுப்பாளையம் அருகே உள்ள கல்லரப்பாடி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தையுடன் சென்று உள்ளார். பொங்கல் பண்டிகை முடிந்து நேற்று காலை வீட்டுக்கு வந்த போது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து பீரோவைத் திறந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 5 சவரன் நகை மற்றும் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து இருவரும் கடலாடி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர் அதன்பேரில் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ஒரே தெருவில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது அப்பகுதியில் மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைகழக பேராசிரியர் வீட்டில் திருட்டு