வேலூர்: பொங்கலையொட்டி எருது விடும் விழா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்தது. பல இடங்களில் கரோனா கட்டுப்பாட்டு விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்ற புகார் எழுந்ததையடுத்து பல மாவட்டங்களில் எருது விடும் விழாவிற்கு தற்காலிக தடை விதித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இன்று (ஜனவரி 24) வேலூர் மாவட்டம் கம்மவன்பேட்டை அருகே எருதுவிடும் விழா நடைபெறவுள்ளதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில், அப்பகுதியில் காளைகளுடன் விளையாட்டில் பங்கேற்க வரக் கூடியவர்களை தடுத்து நிறுத்தும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வேலூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரமடை ஏரிக்கரை பகுதியில் காவல் நிலைய ஆய்வாளர் இளவழகன் சோதனையில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது, கே.வி. குப்பம் அருகே உள்ள காங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரரான மோகன்ராஜ் (35) காளையுடன் கம்மவன்பேட்டை பகுதிக்கு செல்ல முயற்சித்துள்ளார். அவரை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பும் பணியில் காவல் ஆய்வாளர் ஈடுபட்டார்.
அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தின் போது முதலில் மோகன்ராஜ் ஆய்வாளரின் சட்டையைப் பிடித்து இழுத்துள்ளார். தொடர்ந்து ஆய்வாளரும் அவரை விலக்கிவிட்டுள்ளார். ஆனால், இருவரும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, மோகன்ராஜை காவல் துறையினர் அழைத்துச் சென்று வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணனிடம் கேட்டபோது, ”சம்பவம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அவரை தற்போது காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் 875 பேருக்கு கரோனா- பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்குமா?