வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காலாவதியான, உற்பத்தி தேதி மற்றும் உற்பத்தி விவரங்களின்றி சட்ட விரோதமாக சாக்கலேட் சிரின்ஜ்(Choco Dose) விற்பனை செய்யப்படுவதாக வேலூர் மாவட்ட நியமன உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில் குமாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
காலாவதியான சாக்கலேட் சிரின்ஜ்
இந்நிலையில், இன்று (ஜூன் 24) வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளான லாங் பஜார், சுண்ணாம்புக்கார தெரு, சலவன்பேட்டை, காகிதப்பட்டறை உள்ளிட்ட பகுதிகள் மாவட்ட நியமன உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார், வேலூர் மாநகராட்சி அலவலர்கள் அடங்கிய குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, காகிதப்பட்டறை பகுதியிலுள்ள ஒரு கடையில் சுமார் 15 சாக்கலேட் சிரின்ஜ்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அலுவலர்கள் அவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வேலூர் மாவட்ட நியமன உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார் கூறுகையில், "இந்த சாக்லேட் சிரின்ஜ்கள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே வேலூருக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. ஊரடங்கின் காரணமாக வேறு புதிதாக ஏதும் வரவில்லை. ஏற்கனவே இருந்த இருப்புகளை மட்டுமே விற்பனை செய்துள்ளனர். வேலூரில் இரண்டு முகவர்கள் இதனை விற்பனை செய்துவந்துள்ளனர். அங்கு நேரில் சென்று நடத்தப்பட்ட ஆய்வில், அவர்களிடம் வேறு சாக்லேட் சிரின்ஜ் இல்லை என்பது தெரியவந்தது.
![வேலூரில் சட்ட விரோத சாக்கலேட் சிரின்ஜ் விற்பனை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-vlr-02a-illegal-sale-of-chocolate-syringe-img-7209364_24062021140342_2406f_1624523622_738.jpg)
ஆரோக்கிய பாதிப்பு
தொடர்ந்து சென்னையில் இருந்து இவை வாங்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து சென்னையில் உள்ள உணவு பாதுகாப்பு அலவலர்களுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளோம்.
மேலும், இதனை குழந்தைகள் சாப்பிடுவதால் உடல்நலம் பாதிக்கக்கூடும். அவர்கள் பயன்படுத்தும் சிரின்ஜ் என்ன வகை என்பது தெரியாது. இதனை யாரும் வாங்க வேண்டாம். விற்பனை செய்ய வேண்டாம். எவரேனும் விற்பனை செய்வதாக தெரிந்தால் 94440 42322 என்ற எண்ணிற்கு புகாரளிக்கலாம்" என்று தெரிவித்தார்.
மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் சிரின்ஜ்களை கிருமி நீக்கம் செய்துவிட்டு இந்த சாக்லேட்டில் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.