திருப்பத்துார் அடுத்த கந்திலி ஒன்றியம் எறம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆறுமுகம் (47), பார்வதி தம்பதியினர். இவர்களுக்கு சங்கீதா என்ற மகளும் கணேஷன் (27), அருண்குமார் (24) என இரு மகன்களும் உள்ளனர். சங்கீதாவிற்கு திருமணம் முடிந்துவிட்ட நிலையில், குடும்பத்தின் எஞ்சிய நான்கு பேரும் அவர்களின் குடிசை வீட்டில் வசித்துவந்தனர்.
இந்நிலையில், நேற்றிரவு நான்கு பேரும் வீட்டிற்குள் இருந்தபோது சுமார் ஏழு மணியளவில் மின் கசிவு ஏற்பட்டதில் குடிசை வீடு தீப்பற்றியது. உடனே அதிர்ச்சியடைந்த அவர்கள், வீட்டைவிட்டு வெளியே ஓடினர். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றபோது திடீரென பயங்கர சத்தத்துடன் குடிசை வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் சுற்றுச்சுவர் சுக்குநூறாக உடைந்து சிதறியது.
இந்த தீ விபத்தினால் புதியதாக வீடு கட்டுவதற்காக வீட்டில் வைத்திருந்த மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம், நான்கு பவுன் தங்க நகைகள் உட்பட வீட்டில் இருந்த துணிமணிகள், மரச்சாமான்கள், சான்றிதழ்கள், வீட்டு பட்டா என அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. உடனே தகவலறிந்த திருப்பத்துார் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தினால் அருகில் இருந்த மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் லேசான தீ பரவி ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பட்ஜெட் 2020: பொருளாதாரத்தை சரிசெய்ய மின் வாகன உற்பத்தியில் கவனம் தேவை