திருச்சி: திருச்சி மாவட்டம் துவாகுடியிலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரை செல்லும் மகமாயி எனும் தனியார் பேருந்து, பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று (மார்ச் 6) மெயின்கார்டுகேட் செயின் ஜோசப் சர்ச் நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது, குறுக்கே சென்ற ஆட்டோ மீது பேருந்து மோதாமல் இருப்பதற்காக திடீர் பிரேக் போட்டதுடன், பேருந்தை நிறுத்தி ஆட்டோ டிரைவருடன் ஓட்டுநர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அங்கு போக்குவரத்து காவல் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் முனீஸ்வரன் ஓட்டுநர் செல்வத்தை தகாத வார்த்தையில் திட்டியதாகவும், இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் செல்வத்தை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது.
30 நிமிடம் நீடித்த டிராஃபிக்
ஓட்டுநரை தாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பேருந்து ஊழியர்கள் மெயின்கார்டுகேட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு சென்ற மலைக்கோட்டை சரக காவல் துறையினர், சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுப்பதாக சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களை அங்கிருந்து கலைத்தனர். தனியார் பேருந்து ஓட்டுநர்களின் திடீர் சாலை மறியலால் 30 நிமிடத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும், காவல் துறையினர் நடத்திய விசாரணையில் உதவி ஆய்வாளர் ஓட்டுநரை தாக்கியது உண்மை என்று தெரியவந்த நிலையில், உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி ஜல்லிக்கட்டில் கட்டுக்கடங்காத காளைகள்!