திருச்சி திருவெறும்பூர் அருகே பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) செயல்பட்டுவருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிவருகின்றனர். இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்காக வளாகத்தில் 24ஆம் கட்டடம் அருகே தொழிலாளர் கூட்டுறவு வங்கி செயல்பட்டுவருகிறது.
இந்த வங்கியின் மூலமாகத்தான் தொழிலாளர்களின் வங்கி கணக்கிற்கு ஊதியம் அனுப்பப்படும். இந்தத் தொழிற்சாலை முழுக்க முழுக்க பெல் பாதுகாப்பு பிரிவு காவலர்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பிலேயே இருக்கும். இந்தச் சூழ்நிலையில் நேற்றிரவு மாலை வங்கியின் காசாளர் ரவீந்திரன் 1.47 கோடி ரூபாயை ஒரு பெட்டியில் போட்டு வங்கியின் அறைக்குள் வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
அப்போது, வங்கியின் பிரதான நுழைவுவாயில் பூட்டப்பட்டிருந்ததாகவும் தன்னிடம் திறவுகோல் இல்லாததால் வங்கியின் ஜன்னலைத் திறந்து பணப்பெட்டியை உள்ளே வைத்து விட்டுச் சென்றதாக ரவீந்திரன் தெரிவித்துள்ளார். இன்று, காலை வந்து பார்த்தபோது வங்கியின் ஜன்னல் கழற்றப்பட்டு கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து 1.47 கோடி ரூபாயை பெட்டியுடன் தூக்கிச்சென்றது தெரியவந்தது.
இது குறித்து பெல் காவலர்களிடம் வங்கி நிர்வாகிகள் புகாரளித்தனர். புகாரின் பேரில் விரைந்துவந்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டதோடு உடனடியாக மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர். அப்போது, வங்கியில் பதிவாகியிருந்த கைரேகைகளை கைரேகை நிபுணர்கள் கைப்பற்றினர்.
மேலும், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக்கும் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து விசாரணை மேற்கொண்டார்.
திருச்சி லலிதா ஜுவல்லரியில் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குள்ளாகவே திருச்சி அருகே வங்கியில் 1.47 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா பாக்தாதியின் கொலை?