திருச்சி விமான நிலைய வளாகத்தில் ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் சூரிய ஒளி மின்சார திட்டம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அந்த பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து இதன் தொடக்க விழா இன்று நடைபெற்றது. அதை விமான நிலைய மனிதவள உறுப்பினர் அனுஜ் அகர்வால் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் விமான நிலைய இயக்குநர் குணசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த மின்சார திட்டம் குறித்து திருச்சி விமான நிலைய இயக்குநர் குணசேகரன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் இந்த சூரிய ஒளி மின் திட்டம் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 4.62 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 15.4 லட்சம் யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 25 சதவீத மின்சார பயன்பாடு இதன்மூலம் மிச்சப்படும். இதனால் ஆண்டுக்கு 1.23 கோடி ரூபாய் செலவு மிச்சமாகும்.
சூரிய ஒளி மின்சாரம் திட்டம் நாட்டிலேயே முதன்முறையாக திருச்சி விமான நிலையத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் உற்பத்தித் திறனை எதிர்காலத்தில் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலையத்தை பசுமை விமான நிலையமாக மாற்றும் முயற்சியில் இது ஒரு மைல் கல் ஆகும்’ என்று தெரிவித்தார்.
இதைதொடர்ந்து விமான நிலையம் சார்பில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு தலா ரூ.15 லட்சம் மதிப்பிலான 2 ஆம்புலன்ஸ்கள் இலவசமாக வழங்கப்பட்டது. ஆம்புலன்ஸ்களின் சாவியை மருத்துவமனை டீன் (பொறுப்பு) சாரதா பெற்றுக்கொண்டார்.