தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகிய ஐந்து பேரையும், இன்று (ஜூலை.15) மாலை 5 மணி வரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, மதுரை ஆத்திகுளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஏற்கனவே வழக்கு விசாரணையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் ஐந்து பேரிடமும் சிபிஐ அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.
இதனிடையே நேற்று (ஜூலை 14) இரவு காவலர் முத்துராஜாவிடம் சாத்தான்குளம் காவல்நிலையம் மற்றும் பென்னிக்ஸ் கடை அமைந்துள்ள பகுதிகளில் விசாரணையை நடத்தியபின் மீண்டும் சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டு, அவர் அளித்த தகவலின் அடிப்படையில் இன்று காலை மற்ற நான்கு பேரிடமும் இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் விசாரணை நடத்துவதற்கு காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர் முருகன் ஆகிய நான்கு பேரையும் பலத்த காவல் பாதுகாப்புடன் சாத்தான்குளத்திற்கு இன்று (ஜூலை 15) மாலை அழைத்து செல்லப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து சாத்தான்குளம், திருநெல்வேலியில் உள்ள தற்காலிக சிபிஐ அலுவலகத்திலும் கோவில்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், கிளை சிறை அலுவலர், சிறைவாசி உள்ளிட்டோரிடம் சிபிஐ அலுவலர் விசாரணை நடத்தவுள்ளனர்.