விருதுநகர் மாவட்டம் பரளச்சி கிராமத்தை சேர்ந்த சோலையம்மாள், தனது மகன் ரமேஷ் அரவிந்துடன் விளாத்திகுளம் அருகேயுள்ள கோடாங்கிபட்டியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு நேற்றிரவு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட எல்லையான கீழ அருணாசலபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, நடு சாலையில் ஒருவர் கிடந்துள்ளார். அவருக்கு அருகில் 2 பைக்குகளோடு சிலர் நின்றுள்ளனர். இதனைப் பார்த்த தாயும், மகனும் விபத்து எனக் கருதி, தரையில் கிடந்தவரிடம் விசாரித்துக் கொண்டிருக்கையில், அருகில் நின்றிருந்தவர்கள் அரிவாளால் தாயையும் மகனையும் தாக்கியுள்ளனர்.
பின்னர், சோலையம்மாள் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தாலிச் சங்கிலி, 8 கிராம் கம்மல் ஆகிவற்றை பறித்த அக்கும்பல், ரமேஷ் வைத்திருந்த செல்ஃபோனையும் பறித்து தப்பியோடியுள்ளது. ஒரு சில நிமிடங்களில் நடந்து முடிந்த இச்சதியால் அதிர்ச்சி அடைந்த இருவரும் செய்வதறியாமல் திகைத்து போய் நின்றுள்ளனர்.
![விபத்து நடந்தது போல் நாடகம்! தாய் மகனை அரிவாளால் தாக்கி நகைப்பறிப்பு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10869754_199_10869754_1614862501431.png)
அதன் பின்னர் அவ்வழியாக வந்தவர்கள் புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில், காயமடைந்த இருவரையும் மீட்ட காவல்துறையினர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பட்டா பெயர் மாறுதலுக்கு கையூட்டு வாங்கிய விஏஓ கைது!