திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் உடனுறை அறம்வளர்த்தநாயகி அம்மன் திருக்கோயிலின் கருவறையில் இருந்த நடராஜர் சிலை, 1982ஆம் ஆண்டு கடத்தப்பட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிறப்பு புலன் விசாரணைக்குழுத் தலைவர் பொன்.மாணிக்கவேல், ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் நடராஜர் சிலை காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தார்.
நீண்ட ஆய்வுக்கு பின், ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியகத்தில் இருந்த நடராஜர் சிலையும், குலசேகரமுடையார் சிவன்கோயிலில் கடத்தப்பட்ட நடராஜர் ஐம்பொன் சிலையும் ஒன்று தான் என்பதை உறுதி செய்து ஆஸ்திரேலியா அரசுக்கும், இந்திய தொல்லியல் துறைக்கும் அறிக்கை அனுப்பினார்.
இதையடுத்து, நடராஜர் சிலையை ஆஸ்திரேலியாவில் இருந்து டெல்லி கொண்டு வர தேவைப்படும் செலவை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மீட்கப்பட்ட நடராஜர் சிலை புலன் விசாரணைக்குப் பிறகு கும்பகோணம் கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும்.
அதன்பின், நீதிமன்ற உத்தரவைப் பெற்று குலசேகரமுடையார் திருக்கோயிலில் பொதுமக்கள் வழிபாட்டுக்கு வைக்கப்படும். இந்த 700 வருட தொன்மையான பஞ்சலோக நடராஜர் சிலையின் இன்றைய மதிப்பு ரூ. 30 கோடி ஆகும்.