குமரி மாவட்டம் மயிலாடி மார்த்தாண்டபுரம் வாட்டர் டேங்க் ரோட்டை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). இவருக்கு ராமலட்சுமி
(அ) முருகேஸ்வரி (34) என்ற மனைவி, சியாம் சுந்தர் (6), சஞ்சனா (3) என இரு குழந்தைகள்.
உயிர்த்தப்பிய சிறுவன்
செந்தில்குமாரின் பெற்றோர் சொந்த வீட்டில் வசித்து வருகிறார்கள். அதிலிருந்து இரண்டு வீடுகள் தள்ளி செந்தில்குமார் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் தாத்தா பாட்டி வீட்டில் விளையாடச் சென்ற ஷியாம் சுந்தர் வீடு திரும்பாமல் இருந்ததால் அவரைத் தேடி ராமலட்சுமி சென்றார்.
அங்கு சியாம் சுந்தர் கழுத்து இறுகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்ததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையின் கழுத்தில் இருந்த கயிற்றை அகற்றி நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை
அங்கு சியாம் சுந்தருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு உடனடியாக தனது கணவருக்கு ராமலட்சுமி போன் செய்தார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் தனது வீட்டில் இருக்கும் மற்றொரு குழந்தை சஞ்சனாவை பார்த்துக் கொள்ளும்படி கூறினார்.
ஆனால் அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்துவிட்டு வீடு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டுள்ளது என்று கூறினர். இதனால் பதற்றமடைந்த ராமலட்சுமி, பலமுறை கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு உறவினர்கள் மூலம் வேலைக்குச் செல்லும் இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை
பின்னர் மருத்துவமனைக்கு பணம் செலுத்த வேண்டி வீட்டில் இருந்து பணம் எடுப்பதற்காக ராமலட்சுமி வீட்டிற்கு வந்தார். வீடு பூட்டப்பட்டு இருந்ததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது அங்குள்ள தண்ணீர் தொட்டியில் குழந்தை சஞ்சனா சடலமாக மிதந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்ததும் ராமலட்சுமி அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர். இதுகுறித்து அஞ்சுகிராமம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
குடும்பத் தகராறு
தகவலின் அடிப்படையில் அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் ராமலட்சுமியை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது கடந்த சில தினங்களாக கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு நடந்தது தெரியவந்தது. எனவே செந்தில்குமார் மீது சந்தேகம் வலுத்தது. உடனடியாக அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
தலைமறைவு
அந்த காட்சிகளில் செந்தில்குமார் உருவம் சந்தேகத்திற்கிடமாக பதிவாகியுள்ளது. அதாவது மகன் சியாம் சுந்தரை தனது பெற்றோர் வசிக்கும் வீட்டிற்குள் செந்தில்குமார் அழைத்துச் செல்வதும், பின்னர் அங்கிருந்து வெளியே ஓடி வருவது போன்ற காட்சிகள் இருந்தன.
எனவே குடும்பத் தகராறில் குழந்தைகளை கொல்ல வேண்டும் என முடிவு செய்த செந்தில் குமார் முதலில் தனது பெற்றோர் வீட்டில் தனது மகனை கயிற்றால் கழுத்தை இறுக்கி உள்ளார். இதற்கிடையே ராமலட்சுமி வந்ததால் அவசர அவசரமாக வெளியே ஓடி வந்த செந்தில்குமார் பின்னர் தன்னுடைய வீட்டிற்கு சென்று மகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
விசாரணை
இதுகுறித்து ராமலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் செந்தில்குமார் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். செந்தில்குமார் பற்றி விசாரித்த போது தனது மனைவியை அழைத்துவர வேண்டும் என்று கூறி நண்பர் ஒருவரின் கார் மூலம் திருநெல்வேலிக்கு சென்றுள்ளார்.
எனவே அவர் திருநெல்வேலி பகுதியில் மறைந்து இருக்கலாம் என கருதி அவரை கைது செய்வதற்காக அஞ்சுகிராமம் போலீசார் திருநெல்வேலி சென்றுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க : உங்க செய்தி வரக்கூடாதுனா பணம் தாங்க - வசூலில் ஈடுபட்ட போலி பத்திரிகையாளர் கைது