திருநெல்வேலி: மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அலி ஜின்னா. இவர் ஓமநல்லூரில் உள்ள பள்ளிவாசலில் இமாமாக பணி செய்து வருகிறார். இவரது சகோதரர் லுக்மான் ஹக்கீம் மற்றும் சகோதரர் மனைவி சாகர் பானு ஆகியோர் சிவகாசியில் இருந்து பக்ரீத் பண்டிகைக்காக முகமது அலி ஜின்னா வீட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
விடுமுறை தினத்தை கொண்டாடும் வகையில் முகமது அலி ஜின்னா, அவரது மனைவி சமீரா, ஜின்னாவின் சகோதரர் லுக்மான் ஹக்கீம், அவரது மனைவி சாகர் பானு, சமீராவின் சகோதரர் முகமது ஆகியோர் ஆட்டோ மூலம் மேலப்பாளையத்தில் இருந்து கருப்பன்துறை அருகே உள்ள விளாகம் பகுதி தாமிரபரணி ஆற்றுக்கு நேற்று (ஜூலை 16) குளிக்கச் சென்றனர். ஆற்றில் விளையாடியபடி குளித்துக் கொண்டிருந்த ஹக்கீம் மற்றும் அவரது மனைவி சாகர் பானு, ஆழமான பகுதிக்கு சென்ற நிலையில் இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.
இதை கரையில் இருந்தவர்கள் பார்த்து அவர்களை மீட்க முயற்சித்துள்ளனர். அவர்களை மீட்பதற்குள் இருவரும் தண்ணீரில் மூழ்கி காணாமல் போனார்கள். தொடர்ந்து, நெல்லை சந்திப்பு போலீசார் மற்றும் பேட்டை தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பேட்டை தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் தேடி ஹக்கீமை சடலமாக மீட்டனர்.
தொடர்ந்து, சாகர் பானுவை தொடர்ந்து தேடிய தீயணைப்பு வீரர்கள், நள்ளிரவில் அவரை சடலமாக மீட்டனர். இருவரின் உடலையும் உடற்கூராய்வுக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவு;பெண் கத்தியால் குத்திக்கொலை - கொலையாளி ரயிலில் பாய்ந்து தற்கொலை