தீபாவளி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுகள்தான். தீபாவளிப் பண்டிகைக்கு புத்தாடை, இனிப்பு, பலகாரங்கள் என பல நினைவுக்கு வந்தாலும், முதலில் பட்டாசுதான் நினைவுக்கு வரும். சங்கு சக்கரங்கள், மத்தாப்புகள், வெடிகள், வர்ண ராக்கெட்டுகள் உள்ளிட்ட பட்டாசு வகைகள்தான் தீபாவளிக்கே அடையாளமாகும்.
பட்டாசு சத்தம் கேட்காத தீபாவளி திருநாள் முழுமையடையாது. அப்படிபட்ட பட்டாசுகளை வெடிப்பதற்காகவே, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தீபாவளி நாளுக்காக காத்துக்கொண்டிருப்பர். ஆனால், பட்டாசுகள் வெடிக்காமலேயே 40 ஆண்டுகளாக ஒரு கிராமம் உள்ளது.
சேலம் மாவட்டம் அயேத்தியாப்பட்டினத்தை அடுத்த அக்ரஹாரம் நாட்டாமங்கலம் அருகில் உள்ளது வவ்வால்தோப்பு என்னும் கிராமம். 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்த கிராமத்தில் வவ்வால்கள் செறிந்து வாழ்கின்றன. குறிப்பாக அப்பகுதியில் உள்ள புளியந்தோப்பில் உள்ள மரங்களில், பழங்கள் தொங்குவது போல, மரங்கள் முழுக்க வவ்வால்கள் தொங்குகின்றன.
அவை அனைத்தும் பழந்தின்னி இன வவ்வால்கள் ஆகும். தற்போது அழிந்துவரும் உயிரினமான இவ்வகை வவ்வால்கள், கூட்டம் கூட்டமாக இங்கு வாழ்ந்து வருகின்றன. அவை மக்களுக்கு எந்த வித தொந்தரவும் கொடுப்பதில்லை. பலர் அந்த வவ்வால்களை தெய்வங்களாக வணங்கியும் செல்லுகின்றனர்.
அத்துடன் இவற்றைக்காண மக்களும் அதிகளவில் இங்கு வருகை தருகின்றனர். சுமார் 75 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதியில் இவை வசிப்பதால், அப்பகுதி மக்கள் பட்டாசுகள் வெடிப்பத்தில்லை. அப்படி அவர்கள் வவ்வால்களுக்காக 40 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாசுகள் வெடிக்காமல், வாழ்ந்துவருகின்றனர். இதன் காரணமாகவே, இக்கிரமத்திற்கு வவ்வால்தோப்பு என பெயர்பெற்றுள்ளது.
இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த பாலகுமாரன் என்பவர் கூறுகையில்,
"எங்கள் குடும்பம் இப்பகுதியில் தலைமுறை தலைமுறையாக
வசித்துவருகிறது. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, இப்பகுதியில் யாரும் பட்டாசுகள் வெடித்து பார்த்ததில்லை. பட்டாசுகள் வெடிக்காமல் இருப்பதை தலைமுறை தலைமுறையாக பின்பற்றி வருகிறோம். எங்கள் கிராமத்தில் உள்ள மக்களும் அப்படிதான்.
வவ்வால்களின் எண்ணிக்கை அதிமாக உள்ளதால், நாளடைவில் எங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கிராம மக்களும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்த்துவருகின்றனர்" எனத் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய சின்னம்மாள் என்பவர் கூறுகையில்,
"தீபாவளி நாள்கள் மட்டுமல்ல, உள்ளூர் பண்டிகை நாள்களிலும், நாங்கள் பட்டாசுகள் வெடிப்பதில்லை.
வவ்வால்களை காக்க பட்டாசுகள் வெடிக்காமல் இருப்பதால், இது எங்களுக்கு பெரிய குறையாக ஒருபோதும் தோன்றவில்லை. ஒருமுறை தவறுதலாக பட்டாசுகள் வெடித்து வவ்வால்கள் இடமாற்றம் செய்துவிட்டன. பின்பு நீண்ட நாள்களுக்குப் பிறகு மீண்டும் வரத்தொடங்கின. அவற்றை தெய்வமாக இப்பகுதி மக்கள் வணங்குவதால், மீண்டும் பட்டாசுகள் வெடிக்க எண்ணுவதில்லை" எனத் தெரிவித்தார்.
பண்டிகை காலங்களில் மகிழ்ச்சியை மட்டும் வெளிப்படுத்தாமல், எல்லா உயிர்களுக்கும் மதிப்பளித்து, அவற்றின் பாதுகாப்புக்காக வாழ்ந்துவரும் இக்கிராமமக்களின் மனித நேயம் பாராட்டக்குரியது என்பதில் சந்தேகமில்லை.
இதையும் படிங்க: குன்னூரில் தஞ்சம் அடையும் வெளவால்கள்