சேலம்: ஆத்தூர் அருகேவுள்ள முல்லைவாடி ரங்கன் தெருவைச் சேர்ந்தவர், பிரபாகரன் (33). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சோலையம்மாள் (23) என்பவரைக் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வற்புறுத்தி கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார்.
சோலையம்மாளுக்கும் அவரின் பெற்றோர், உறவினர்களுக்கும் பிரபாகரனைப் பிடிக்கவில்லை என்பதால், இரண்டு குடும்பத்தினருக்கும் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது.
கட்டாயத் திருமணம் என்ற போதிலும் திருமணம் நடந்துவிட்டதால் சோலையம்மாளும், பிரபாகரனுடன் வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், தற்போது 8 மாத கர்ப்பிணியான சோலையம்மாளுக்கும் பிரபாகரனுக்கும் இடையே அடிக்கடி வரதட்சணை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
வயிற்றில் இருந்த சிசு உயிரிழப்பு
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, மீண்டும் அவர்களுக்குள் ஏற்பட்டத் தகராறு காரணமாக, மனமுடைந்த சோலையம்மாள் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து ஊற்றி, தீ வைத்துக்கொண்டார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது சோலையம்மாள் வயிற்றில் இருந்த எட்டு மாத சிசு இறந்துவிட்டது. இதையடுத்து, அவரை மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த இறப்பிற்குக் காரணமான பிரபாகரனை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோலையம்மாளின் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் பிணவறை முன்பாக கதறியழுது, உடலை வாங்க மறுத்தனர்.
பெண் இறப்புக்குக் காரணமான கணவரை கைது செய்யக்கோரிக்கை
சோலையம்மாளின் இறப்பு குறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், "கேஸ் சிலிண்டர் வாங்க கொடுத்த பணத்தை எடுத்துச்சென்று, பிரபாகரன் மது குடித்துவிட்டு, போதையில் வீட்டிற்கு வந்து சோலையம்மாளுடன் தகராறு செய்துள்ளார். அதில் மனமுடைந்த சோலையம்மாள், இவ்வாறு மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்துள்ளார்.
சோலையம்மாளின் இறப்பிற்கு நீதி வேண்டும். அவரது கணவர், உறவினர்களைக் கைது செய்ய வேண்டும். வரதட்சணைக் கொடுமை செய்து அநியாயமாக சோலையம்மாளை கொலை செய்ததற்காக உச்சபட்ச தண்டனையை நீதிமன்றம் வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சடலத்தை வாங்க மறுத்த உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதியளித்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காதல் மனைவி மரணித்த சோகத்தில் கணவன் தூக்கிட்டுத் தற்கொலை