ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கியெறியக் கூடிய நெகிழிப் பொருள்களுக்குத் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஒரு ஆண்டு ஆன நிலையிலும் கூட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப்பைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அவ்வப்போது அலுவலர்கள் மேற்கொள்ளும் திடீர் ஆய்வில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நெகிழிப்பைகள் சிக்கிய வண்ணமுள்ளன.
இவ்வேளையில், செவ்வாய்பேட்டைப் பகுதியில் உள்ள ஒரு சேமிப்புக் கிடங்கில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள நெகிழிப் பொருள்கள் தயாரிக்கப்படுவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான நெகிழிப் பொருள்களையும் அதன் மூலப்பொருல்களையும் அலுவலர்கள் பறிமுதல் செய்ததோடு, கிடங்கின் மின் இணைப்பையும் துண்டித்தனர். மேலும் அதன் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் காவல் துறையினருக்கு அலுவலர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.