தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், அரசு டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட அனைத்து விதமான மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.
இதனைப் பயன்படுத்தி பலர் வெளி மாநிலங்களிலிருந்து மதுபாட்டில்களைக் கடத்தி வந்து, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்து வருகின்றனர்.
117 மதுபாட்டில்கள்
சேலம், அஸ்தம்பட்டி பகுதியில், குடியிருப்புப் பகுதிகளில் மதுபானங்கள் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக மாநகர காவல் உதவி ஆணையாளர் ஆனந்தகுமாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அஸ்தம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் பொன்குமார், நுண்ணறிவு பிரிவு அலுவலர் காவேரி உள்ளிட்ட காவலர்கள் நடத்திய சோதனையில், சின்ன திருப்பதி பகுதியைச் சேர்ந்த ஹரிஹர சுதன் (45) என்பவர், தனது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அவரைக் கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்து 117 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஹரிஹரசுதனை கரோனா பரிசோதனைக்கு அழைத்துச் சென்று, பிறகு சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.