சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் மாவட்ட அதிமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்னையன் , "2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்த திமுகவினர் வடநாடுகளில் உயிரோடு இல்லாத நபர்களின் பெயரில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளனர்.
ஆ.ராசாவை மக்கள் காரிதுப்புவார்கள் என்பதைக்கூட உணராமல் உள்ளார். கனிமொழியும் ராசாவும் அந்த அளவிற்கு ஊழல் செய்துள்ளனர் . இவர்கள் ஜெயலலிதாவை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. அதிமுக கூட்டணி அமைக்கிறதோ இல்லையோ தனித்து ஆட்சி அமைக்கும் அளவில் பலமாக உள்ளது. முதலமைச்சர் அந்த அளவிற்கு ஆட்சி நடத்திவருகிறார்.
வேளாண் சட்டத்தை திமுக எதிர்த்து வருகிறது. விவசாயிகள் இடைத்தரகர்களால் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காகவே புதிய வேளாண் சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. ஆனால், விவசாயிகளிடமிருந்து பொருட்களை வாங்கி கொள்ளை லாபத்திற்கு விற்கும் இடைத்தரகர்களின் தளபதியாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் இருக்கிறார் அதனால்தான் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் " என்று கூறினார் .