சேலம்: ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளரான மணியை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்.3) பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகிறார். அவர் போடாத வேடங்கள் இல்லை. ஆனாலும், ஸ்டாலினின் வெற்றிக்கனவு பலிக்காது.
அதிமுகவிற்கு இயற்கையும், மக்களும் சாதகமாக இருக்கின்றனர். தமிழ்நாட்டில் ஏழை என்ற சாதி எதிர்காலத்தில் இல்லாத நிலையை உருவாக்குவோம்.
தமிழ்நாடு முழுவதும் ஊர் ஊராகச் சென்று என்னைப் பற்றி தெரியாது என்று பேசிய ஸ்டாலின், தற்போது அனைவருக்கும் என்னை தெரிய வைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுகவில் அண்ணா இறப்பிற்குப் பிறகு, சூழ்ச்சி செய்து முதலமைச்சர் ஆனார், கருணாநிதி. பின்னர் உடல் நிலைக் குன்றிய போதிலும் ஸ்டாலினை நம்பி திமுக தலைவர் பதவியை கருணாநிதி கொடுக்கவில்லை. கருணாநிதியே ஸ்டாலினை நம்பவில்லை. அப்படி இருக்கும்போது நாட்டு மக்கள் எப்படி உங்களை நம்புவார்கள் ?.
இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக தான். எனவே, காலத்தால் அழிக்க முடியாத கரும்புள்ளியை திமுக பெற்றுள்ளது.
இந்தியாவிலேயே ஜனநாயக கட்சி அதிமுக தான். தற்போது உலகம் மாறிவிட்டது. விஞ்ஞான உலகம் என்பதால், ஸ்டாலின் பொய்களை இளைஞர்கள் நம்பமாட்டார்கள்.
எந்த காலத்திலும் ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது. தமிழ்நாட்டு மக்களை இருட்டறையில் அடைத்தது போல் திமுக ஆட்சியில் வைத்திருந்தனர். ஆனால், மக்களுக்கு வெளிச்சத்தைக் கொண்டு வந்தவர், ஜெயலலிதா தான்.
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வை தடுத்து நிறுத்தியது அதிமுக ஆட்சியில் தான், என்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளனர்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'வாங்க வாங்க ஏரியாவுக்கு வாங்க...': மம்தாவின் சவாலை ஏற்ற மோடி!