தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வெளிநடப்பு செய்த திமுக தலைவர் ஸ்டாலின் குறித்த கேள்விக்கு, 'எதிர்க்கட்சிகள் பொதுவாக அப்படித்தான் நடந்துகொள்வார்கள். இந்த அரசை அவர்கள் குற்றம் குறை சொல்ல இயலாது. அதனால் சட்டப்பேரவையில் எதிர்வாதம் செய்ய முடியாமல் செல்கின்றனர்' என்றார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தில் அதிமுக அரசு தங்களது நிலைப்பாட்டை மாற்றினால் மக்களின் ஆதரவு இருக்கும் என்று தொல். திருமாவளவன் கூறியது குறித்த கேள்விக்கு, இந்தச் சட்டத்தின் மூலமாக இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் இந்த அரசு சிறுபான்மையினருக்கு அளித்த சலுகைகள் குறித்து முதலமைச்சர் சட்டப்பேரவையில் கூறியபொழுது சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர் என்றும் கூறினார்.