மதுரை: இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) சார்பாக ’கனெக்ட்’ என்ற தலைப்பில் தகவல் தொழில்நுட்ப துறை வளர்ச்சி குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டார்.
மேலும் இந்தக் கருத்தரங்கில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் ராஜா வர்மா கலந்துகொண்டனர். இரண்டு மணி நேரம் நடைபெற்ற தகவல் தொழில்நுட்பத் துறை குறித்த கருத்தரங்கில் தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை முன்னேற்றம் மற்றும் புதிய தொழில்துறை தொடங்குவது குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “கரோனா நோய்த்தொற்றின் காரணமாக ஆன்மிகம், கல்வி, வணிகம், வியாபாரம் அனைத்தும் இணையதளம் மூலமாக நடைபெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: "சசிகலாவை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவில் மீண்டும் இணையலாம்" - அமைச்சர் ஜெயக்குமார்
மேலும், “பாரத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி கிராமத்திற்கும் குறைந்த செலவில் இணையதள வசதி செய்து கொடுப்பதற்கான தமிழ் நெட் திட்டம் தொடங்கப்பட்டது.
பல்வேறு தடைகளைத் தாண்டி பாரத் திட்டத்திற்கு மத்திய அரசிடமிருந்து நிதி ஆதாரத்துக்காக ஒப்புதல் பெறப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்த திட்டம் மிகப்பெரிய மைல்கல்லாக அமையும்.

அதிவிரைவு இணையதள சேவை ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்றடைந்தால் மருத்துவம் கல்வி என அனைத்தும் வளர்ச்சி அடைவதற்கு உறுதுணையாக இருக்கும். மாணவர்களுக்கு இணையதளம் மூலமாகவும் தொலைக்காட்சி மூலமாகவும் பாடம் நடத்துவதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க : சாத்தான்குளம் கொலை வழக்கு: டெல்லியிலிருந்து மதுரை வந்த சிபிஐ அலுவலர்கள்
முதல் ஊரடங்கு காலத்திலிருந்து விவசாயம் தடை இல்லாமல் எவ்வாறு செயல்பட்டு வருகிறது. அதே போல் தகவல் தொழில்நுட்பமும் செயல்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பத்தின் வசதியும் வாய்ப்பும் நம்மிடம் இல்லை. எனவே அதனை எவ்வாறு சிறப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்பது நம்முடைய சவாலாக இருந்து வருகிறது” என்றார்.