தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் எல்லைக்கு உட்பட்ட அகரம் கிராமத்தில், இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மணல் கடத்தல் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சட்டவிரோத மணல் குவாரிகளை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் இன்று (டிசம்பர் 17) விசாரணைக்கு வந்தது. அப்போது, தாமிரபரணி ஆற்றை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தாமிரபரணி ஆற்று மணலில் கனிமங்கள் உள்ளன. அட்டாமிக் அனு சக்திக்கு தேவையான கனிமங்கள் உள்ளன. இவை அரிய வகையில் கிடைக்கும் கனிமங்கள் என தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கனிமங்களை பாதுகாக்க வேண்டிய அரசு அலுவலர்கள், எவ்வாறு மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்குகிறார்கள்? வழக்கறிஞர் ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில், தாமிரபரணி ஆற்று மணலை நேரில் சென்று ஆய்வு செய்து மத்திய அணுசக்தி துறை செயலர், பொதுப்பணித்துறை செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, தாமிரபரணி ஆற்றில் இருந்து மணல் எடுக்கக் கூடாது; தாமிரபரணி ஆற்று மணலை பாதுகாத்து, தற்போதைய நிலையிலேயே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 21ஆம் தேதி ஒத்தி வைத்தனர்.