மாற்றுத்திறனாளிகள் (உடல் ஊனமுற்றோர்) மற்றும் மன நலம் பாதிக்கப்பட்டோருக்கு என சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து மதுரை மாகாளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிபாரதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார்.
அம்மனுவில், "நமது நாட்டில் 2.68 கோடி பேர் மன நலம் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர். இதில் பலர் நடக்க இயலாத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் ஆசிட் வீச்சு, விபத்துகள், இடிபாடுகளில் சிக்கியும் ஊனமுற்றவர்களாக மாறி சிரமப்பட்டு வருகின்றனர். இவர்கள் தங்கள் உரிமைகள் பெறுவதற்கு பல்வேறு போராட்டங்களை சந்திக்க வேண்டியுள்ளது.
இது போன்ற மாற்றுத்திறனாளிகள் சிலர் நீதிமன்றங்களுக்கு செல்லும் போது பல்வேறு சங்கடங்களை சந்திக்க வேண்டியுள்ளது.மேலும் பலர் தாழ்வு மனப்பான்மையால் வெளியிடங்களுக்கு சென்று வராமல் வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர். இவர்கள் தங்களுக்கு தேவையானவற்றை அரசிடம் பெறுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு அரசு, 2016ஆம் ஆண்டில் மனநலச் சட்டத்தின் படி சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என விதிகளை இயற்றி இருந்தது.
![மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்க கோரிய வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-hc-03-differently-abled-spl-court-script-7208110_27112020182050_2711f_1606481450_132.png)
ஆனால், இதுவரை இது தொடர்பான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையே நீடித்துவருகிறது. எனவே, மாவட்டந்தோறும் மாற்றுத்திறனாளிகள் வந்து செல்வதற்கு வசதியாக, சாய்வு தளங்கள் போன்ற வசதிகளுடன் கூடிய சிறப்பு நீதிமன்றமும், அவர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு அரசு வழக்கறிஞர்களையும் நியமிக்க உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த மனுவானது, உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் தலைமையிலான அமர்வுக்கு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், “இது குறித்து மத்திய, மாநில அரசுகள் விரைந்து பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.
இதையும் படிங்க : தமிழ் வழியில் பயின்று இட ஒதுக்கீட்டில் வேலைக்கு சென்றவர் பட்டியல் தர உத்தரவு