மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வழக்குரைஞர் சங்கத்தின் சார்பில் டிச.8ஆம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடந்தப்பட்டது.
அப்போது, வழக்குரைஞர் சிவக்குமார் என்பவர் நாகர்கோவில் ஜே.எம் இரண்டாம் எண் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். இதனையடுத்து, வழக்குரைஞர் சிவக்குமார் நாகர்கோவில் வழக்குரைஞர் சங்கத்தில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாகர்கோவில் வழக்குரைஞர் சங்கத்தின் இந்த முடிவை எதிர்த்து வழக்குரைஞர் சிவக்குமார், உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவானது, மதுரை கிளை நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக இன்று (டிச.21) விசாரணைக்கு வந்தது.
![Lawyers should not protest illegally - Madurai branch judges](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-mdu-hc-06-lawyers-dont-protest-script-7208110_21122020221307_2112f_1608568987_623.png)
அதனை ஆராய்ந்த நீதிபதிகள், “வழக்குரைஞர்கள் தொழிற்சங்கத்தினரைப் போல போராட்டத்தில் ஈடுபடக் கூடாது.
ஏனெனில், வழக்குரைஞர் தொழில் மிகவும் புனிதமானது. ஆனால், தற்போது வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர்.
சில சங்கங்கள் அரசியல் மற்றும் ஜாதி ரீதியான காரணங்களுக்காக கூட போராடுகின்றனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கறிஞர்களின் போராட்டம் சட்ட விரோதமானது. தனது கட்சிக்காரருக்காக மனுதாரர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
எனவே, அவர் மீதான நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மனுதாரருக்கு காவல்துறையினரின் பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழ்நாடு பார்கவுன்சில் நாகர்கோவில் வழக்குரைஞர் சங்கத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்ட மேலதிக விசாரணையை ஜன. 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க : பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!