சென்னையைச் சேர்ந்த ஜெகநாத் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஆதிகேசவ பெருமாள் கோயில் 3500 ஆண்டுகள் பழமையானது
அதில், 'கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆதிகேசவ பெருமாள் கோயில் 3500 ஆண்டுகள் பழமையானது. மன்னர் பரம்பரை நிர்வாகத்தின்கீழ் இருந்த கோயிலானது, சுதந்திரத்திற்குப் பிறகு திருவாங்கூர் சமஸ்தானத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தக் கோயிலில் பல ஆண்டுகளாக குடமுழுக்கு நடத்தப்படாமல் உள்ளது. மேலும், கோயிலுக்கு பாத்தியப்பட்ட பல இடங்கள் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. கோயிலில் பல வகையான அரியவகை சிற்பங்கள், பழங்காலத்துப் பொருள்கள் உள்ளன.
குடமுழுக்கு நடத்த அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்
இவை அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டியவை. கோயிலிலுள்ள சில பகுதிகளில் பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையில் உள்ளது. ஆனால் கோயில் நிர்வாகம் அதை சரிசெய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.
மேலும் கோயிலுக்கு பாத்தியப்பட்ட பல சொத்துக்கள், கோயில் அருகே உள்ள நிலங்களை சில தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு பாத்தியப்பட்ட சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். கோயிலில் திருப்பணி நடத்தி, ஆகம விதிப்படி குடமுழுக்கு நடத்த அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கூறியிருந்தார்.
75 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது
இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, '75 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. கரோனா காலத்தில் பணியாளர்கள் வேலைக்கு வராததால் பணிகள் தாமதம் அடைந்துள்ளன. நான்கு மாதத்தில் பணிகள் நிறைவுபெற்று, குடமுழுக்கு நடைபெறும்' என கோயில் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், அறிக்கையாக தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: 'பழனி முருகன் கோயில் ஆக்கிரமிப்பு வழக்கு: தற்போதைய நிலை அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவு!'