மதுரை: மதுரையைச் சேர்ந்த ஜான் மார்டின், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்தார்.
அதில், "மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989இல் ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி தொடர்பாக ஜூன் 7ஆம் தேதி திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஓட்டுநர் பயிற்சி தொடர்பான, மத்திய மோட்டார் வாகன திருத்த விதிகள் ஜூலை 1 ( 2021) முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்தப் புதிய விதியில், அரசின் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில், ஓட்டுநர் பயிற்சிப் பெற்றவர்கள், உரிமம் பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகத்தில் வாகனங்களை ஓட்டிக்காட்ட தேவையில்லை என்ற புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது.
புதிய திருத்த விதிமுறைப்படி, அரசின் அங்கீகாரம் பெற்ற பயிற்சிப் பள்ளிகள், இரண்டு ஏக்கர் பரப்பில் அமைந்திருக்க வேண்டும். பயிற்சி எடுப்பதற்கான கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.
இந்தியா முழுவதும் உள்ள நான்காயிரத்து 187 ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி நடத்துவோர் பாதிக்கப்படுவர். குறிப்பாக தமிழ்நாட்டில் ஆயிரத்து 650 ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி நடத்துவோர், அங்கு பணிபுரியும் பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
எனவே, ஓட்டுநர் பயிற்சி பள்ளி அங்கீகாரம் தொடர்பான, மத்திய மோட்டார் வாகன விதிமுறை திருத்தத்திற்கு இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கு குறித்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், "இந்தத் திருத்தம், மூலச் சட்டத்திற்கு எதிரானது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட தனியார் பயிற்சிப் பள்ளியில் படித்தால், அலுவலரிடம் வாகனம் ஓட்டிக்காட்ட தேவையில்லை என்று திருத்தப்பட்டுள்ளது.
இதனால் உரிய பயிற்சி பெறாமல், குறுக்கு வழியில் தகுதிபெற்றவர்கள் ஓட்டுநர் உரிமம் பெறும் வாய்ப்பு உள்ளது. இதனால் விபத்துகள் நடக்கும் வாய்ப்பு உள்ளது" என வாதிட்டார். இதைத் தொடர்ந்து நீதிபதிகள், தற்போது நான்கு வழிச்சாலை என அதிவேகச் சாலைகள் உள்ளன. மேலும் கனரக வாகனங்கள் அதிகம் வந்துள்ளன.
இதுபோன்ற காலகட்டத்தில் நன்கு பயிற்சிப் பெற்ற ஓட்டுநர்கள் தேவைப்படுகின்றனர். மேலும் தற்போது ஓட்டுநர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் இதுபோன்ற திருத்தம் தேவைப்படுகிறது எனக் கூறிய நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.