மதுரையில் இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் சுந்தரவடிவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீபாவளி முதல் லட்டு வினியோகம் செய்யவுள்ள முடிவை கோயில் நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் யாரும் லட்டு பிரசாதத்தை கேட்கவில்லை, மீனாட்சி அம்மனின் குங்குமம் மட்டும் கொடுத்தால் போதும் என்று நினைக்கின்றனர்.
இதேபோல், 15 ஆண்டுகளுக்கு முன்பு குங்குமம் வழங்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்று வரை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என்று கோயில் நிர்வாகம் மீது குற்றம் சாட்டினர். தொடர்ந்து அவர் பேசுகையில், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச லட்டு கொடுக்கும் திட்டத்தால் ஒரு வருடத்திற்கு கோயில் நிர்வாகம் சார்பில் நான்கு கோடி ரூபாய் வரை செலவு ஆகும்.
அதற்கு பதிலாக மீனாட்சி அம்மன் கோயில் தல வரலாறுகளை புத்தகங்களாக பக்தர்களுக்கு கொடுக்கலாம். மேலும் தரிசனத்திற்கு பிறகு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து லட்டு பெற்றால் பாதுகாப்பு குறைபாடும், கூட்ட நெரிசலும், ஊழியர்களுக்கு வீண் பணிச்சுமையும், கோயில் நிர்வாக செயல்பாடு குறைவும் ஏற்பட வாய்ப்புஉள்ளது.
வருகிற 2020ஆம் ஆண்டு கோயிலின் குடமுழுக்கு திருவிழா நடைபெற உள்ள நிலையில் தீ விபத்து ஏற்ப்பட்ட பகுதிகளில் இதுவரை சிரமைப்பு பணிகளை கோயில் நிர்வாகம் செய்யவில்லை. இந்நிலையில் கோயில் நிர்வாகம் லட்டு கொடுத்து மக்களை திசை திருப்பப்பார்க்கிறது.
லட்டு கொடுத்தால் யாரும் ஏற்க தயாராக இல்லை என்றும் பக்தர்களின் கோரிக்கைகளை கோயில் நிர்வாகமும், அறநிலையத் துறையும் கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளது வேதனை அளிக்கக்கூடிய வகையில் உள்ளது. மேலும் இது சம்பந்தமாக தமிழ்நாடு அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க:மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவின் இரண்டாம் நாள்