கச்சநத்தம் கருப்பு ராஜா என்ற முனியாண்டி சாமி, இளையராஜா, கனீத் என்ற கனீத்குமார், அக்னி என்ற அக்னி ராஜ், ஒட்டகுலத்தான் என்ற கந்தசாமி உள்ளிட்ட ஒன்பது பேர் பிணை கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதில், "கச்சநத்தம் சாதிய மோதல் வழக்குத் தொடர்பாக ஓராண்டுக்கும் மேலாக சிறையிலிருக்கிறோம். வழக்கின் விசாரணை முடிந்துவிட்டது. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. எங்களை இனிமேல் நீதிமன்றக் காவலில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே எங்களுக்குப் பிணை வழங்கி உத்தரவிட வேண்டும்"எனக் கூறியிருந்தனர்.
இந்த வழக்கின் புகார்தாரரான மகேஸ்வரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பகத்சிங், "வழக்கை தினமும் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டது. இருப்பினும் குற்றவாளிகள் அழைப்பாணை பெறாமல், ஆஜராகாமல் இருப்பது போன்ற நடவடிக்கைகளால் விசாரணையை தாமதப்படுத்தி வருகின்றன. ஆகவே, அவர்களுக்குப் பிணை வழங்கக் கூடாது" எனத் தெரிவித்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி பார்த்திபன், "இது ஒரு அரிய வழக்கு. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பிணை வழங்க முடியாது. சாதி உள்நோக்கத்துடன் முன்கூட்டி சதிசெய்து திட்டமிடப்பட்டு நடைபெற்ற ஒரு குற்றச்சம்பவம் இது.
ஒட்டுமொத்த பாதிப்பையே கவனத்தில் கொள்ள வேண்டும். மூன்று பேரின் உயிரிழப்பு, ஐவரின் படுகாயங்கள் ஆகியவற்றை கருத்தில்கொண்டு இந்த வழக்கில் இவர்களுக்குப் பிணை வழங்க முடியாது" எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.