பாஜக தேசிய செயலாளராக இருந்த ஹெச். ராஜா, உயர் நீதிமன்றத்தை இழிவுப்படுத்தி பேசியதாக தந்தை பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் துரைசாமி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவில், "கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற ஊர்வலத்தின்போது, மேடை அமைத்து பேசுவதற்கு காவல் துறை அனுமதி மறுத்தது.
அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அப்போதைய பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா காவல் துறையை கண்டித்ததுடன், நீதிமன்றத்தை கொச்சைப்படுத்தும் வகையில் இழிவான சொற்களில் விமர்சித்திருந்தார். அந்த விவகாரம் தொடர்பாக திருமயம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கு திருமயம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் திருமயம் காவல் நிலையம் விசாரித்த வழக்கில், விசாரணையை முடித்து, விரைவில் ஹெச். ராஜா மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிடக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆனால், மூன்று வருடங்களுக்கு மேலாக காவல் துறை தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல், கால அவகாசம் கேட்டு, நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தது.
ஏற்கெனவே, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமலதா "குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பான உத்தரவை ஏப்ரல் 27ஆம் தேதிக்குள்ளாக நிறைவேற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்” என எச்சரித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (ஜூன் 17) நீதிபதி இளங்கோவன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்றத்தை இழிவுபடுத்திப் பேசிய ஹெச். ராஜா மீது திருமயம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் அன்பு தகவல் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, நீதிபதி குற்றப்பத்திரிகை நகலை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.