மதுரை: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சியின் ஆணையர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "பட்டுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட ஒப்பந்த வேலைகள் செய்யும் நிறுவனங்கள், அதன் ஊழியர்களுக்கான பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதியை, பணியாளர்கள் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் செலுத்தவில்லை.
அதன் நிலுவைத் தொகை 71 லட்சத்திற்கு மேல் இருந்து வருகிறது. இதன் காரணமாக, பணியாளர்கள் வருங்கால வைப்புநிதி அலுவலகம், பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தின் இந்தியன் வங்கி கணக்கை முடக்கியுள்ளது. இதனால் நகராட்சி சார்பாக செலவுகள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
மேலும், வருங்கால வைப்புநிதி பங்களிப்புத் தொகையை செலுத்துவது, அந்தந்த ஒப்பந்த நிறுவனங்களின் பொறுப்பே தவிர, நகராட்சியின் பொறுப்பல்ல. எனவே பட்டுக்கோட்டை நகராட்சி வங்கிக் கணக்கை முடக்கியதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தனர். இந்த மனு நீதிபதி பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்தியா முழுவதும் எத்தனை மாநிலங்களில், பணியாளர்கள் வருங்கால வைப்புநிதி அலுவலகம், நகராட்சி வங்கிக் கணக்கை முடக்கியுள்ளது? என கேள்வி எழுப்பினர். இந்தியா முழுவதும் இதே நடைமுறைதான் பின்பற்றப்படுகிறதா? என்றும் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்துப் பணியாளர்கள் வருங்கால வைப்புநிதி அலுவலகம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி பதவியேற்பு!