மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் மருத்துவர் செந்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "மருத்துவ சிகிச்சை விவகாரம் தொடர்பாக பொது மக்கள் போராட்டம் நடத்தினாலும், ஊடகத்தில் செய்தி வந்தாலும் சம்பந்தப்பட்ட மருத்துவர், செவிலியர் எந்தவொரு விசாரணையும் இன்றி தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள 1,600 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் பிரசவம் பார்க்கும் முறையை ரத்து செய்ய வேண்டும். மருத்துவர்கள் பணியில் இருக்கும் நேரமான காலை 9 முதல் மாலை 4 மணி வரை மட்டுமே செவிலியர்கள் பிரசவம் பார்க்க அனுமதிக்க வேண்டும்.
2007 முதல் 24 மணி நேரமும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் பிரசவம் பார்த்து வருகிறார்கள். கடந்த ஓர் ஆண்டாக செவிலியர்கள் பிரசவகால சிக்கல்களின் போது மருத்துவர்கள் ஆலோசனை வழங்க ‘மெண்டார்’ (Mentor) சிறப்பு மருத்துவர் நியமிக்கப்பட்டார்கள்.
மருத்துவர்கள் வீடியோ காலில் பிரசவம் பார்க்கவில்லை, ‘மெண்டர்’ முறையில் வீடியோ காலில் ஆலோசனை வழங்கப்பட்டது, மருத்துவ கவுன்சிலுக்கு எதிராக மருத்துவர் போனில் ஆலோசனை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.
தமிழகத்தில் காலியாக உள்ள 1,000 மருத்துவர்கள் பணியிடத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். பிரசவ கால சிக்கல்களுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து பலியாக்கப்பட்டு வருகிறார்கள். ஆண்டுக்கு 1,500 மருத்துவர்கள் தண்டணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.
தீவிரவாதிகளிடம் கூட விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால், அரசு மருத்துவர்கள், செவிலியர்களிடம் விசாரணை நடத்தாமல் இடமாற்றம் செய்கின்றனர்.
அரசு இதை பரிசீலனை செய்து, சிகிச்சை முறைகளில் மாற்றம் செய்யாவிட்டால், மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
மேலும், மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இருப்பது உண்மை தான் எனவும், மருந்துகளை சுகாதாரத்துறை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமைச்சரவைக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா?