அந்த அறிக்கையில் டிஜிபி கூறியிருப்பதாவது:
சிஏஏ-வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த பிப்ரவரி மாதம் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப் போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்திருந்தனர்.
இந்தப் போராட்டத்திற்குத் தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய மக்கள் மன்றத் தலைவர் வாராகி வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கரோனா பரவல் குறையும்வரை தமிழ்நாட்டில் எந்த ஆர்ப்பாட்டம், போராட்டம், ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது எனக் காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், நீதிமன்ற உத்தரவை மீறி தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் நடந்ததைத் தொடர்ந்து காவல் துறையினருக்கு எதிராக வாராகி நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை டிஜிபி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
அதில், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், ஊர்வலங்களுக்கு காவல் துறை அனுமதி வழங்காதபோதும், நீதிமன்ற உத்தரவை மீறி வேல் யாத்திரையை பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் நடத்தியதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது.
காவல் துறையினரின் அனுமதி பெறாமல் பாஜக வேல் யாத்திரை நடத்தி பொதுமக்களுக்கு கரோனா தொற்று பரப்ப காரணமாக இருந்தது, பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றாதது, காவல் துறையினரிடம் தவறாக நடந்துகொண்டது, சாலை மறியல் செய்து பொதுமக்களுக்கு இடையூறு செய்தது போன்ற குற்றங்களுக்காக இதுவரை 135 பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதாக இதுவரை ஆயிரத்து 241 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: நடிகர் ரஜினியும் அர்ஜுனமூர்த்தியும் முக்கிய ஆலோசனை