ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து லாரி ஒன்று, மைசூருக்கு தவிட்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திம்பம் மலைப்பாதை வழியாகச் சென்று கொண்டிருந்தது. சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் லாரியை ஓட்டினார். மைசூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தசரா பண்டிகையைக் காண்பதற்கு அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன், வளையல் வியாபாரி சங்கர் ஆகிய இருவரும் லாரியில் பயணித்தனர்.
அப்போது திம்பம் மலைப்பாதையில் லேசான மழைத் தூறிக்கொண்டிருந்தது. இந்நிலையில், திம்பம் 9ஆவது வளைவில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி, மேலே ஏறமுடியாமல் பின்னோக்கி வந்து சாலையோர சுவற்றை இடித்துக்கொண்டு 7ஆவது வளைவில் விழுந்தது.
இதில் கிருஷ்ணன், ஓட்டுநர் அருண்குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். பின்னால் வந்த வாகன ஓட்டிகள் இந்த விபத்து குறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையடுத்து, அங்கு வந்த மீட்பு வாகனம் தவிட்டு மூட்டைகளை அகற்றியபோது, அங்கு சங்கர் உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. பின்னர் சங்கரின் சடலத்தை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: தடுப்புச்சுவரில் இருச்சக்கர வாகனம் மோதி தந்தை மகன் பலி!