ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆர்.எஸ். குளத்துப்பாளையத்தைச் சேர்ந்த பூசப்பன் என்பவருக்கும், நஞ்சனாபுரத்தைச் சேர்ந்த சத்யா என்கிற சாரதாம்பாளுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5, 4 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பூசப்பன் உணவகம் ஒன்றையும், மதுபான பார் ஒன்றையும் நடத்தி வருகிறார். கணவன் மனைவிக்கிடையே வரதட்சணை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் குடிப்பழக்கம் உள்ள பூசப்பன் மனைவியை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார்.
இத்தருணத்தில் நேற்றிரவு சத்யா வீட்டில் தனியாக இருந்தபோது தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார் கணவர் பூசப்பன். தகவலறிந்த பெண்ணின் வீட்டார் பூசப்பன் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது இறந்தவரின் உடலை அடக்கத்திற்கு எடுத்துச் செல்ல தயாராகியுள்ளனர்.
பெண்ணின் குடும்பத்தினரும், உறவினர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், சத்யாவை பூசப்பன் நேற்றிரவு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், கொடுமையைத் தாங்க முடியாமல் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், தனது சாவுக்கு கணவர் பூசப்பனும், அவரது குடும்பத்தாரும்தான் காரணம் என்று வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்திகளை பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பியுள்ளதாக காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் கொரோனா: தொடரும் பதற்றம்
இந்த குறுஞ்செய்திகளை கொண்டு வழக்குப்பதிவு செய்த பெருந்துறை காவல் துறையினர், சத்யாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே பெண்ணின் பெற்றோர்களும், உறவினர்களும் சத்யாவின் மரணத்தில் சந்தேகமிருப்பதாகவும், உடலின் சில பகுதியில் ரத்தக்காயங்கள் இருப்பதால் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று கூறி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சத்யாவின் மரணத்திற்கு காரணமான பூசப்பன் மீதும், அவரது பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுத்திடும் வரை உடலை பெற மாட்டோம் என்று தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதி வழங்கியதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு உடலைப் பெற்றுச்சென்றனர்.